காரைக்கால்: நெடுங்காடு (தனி) தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
முதலாவதாக காரைக்கால் வடக்குத் தொகுதி மற்றும் நெடுங்காடு தொகுதி வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், முதல் சுற்றிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா முன்னிலையில் இருந்து வந்தார். நிறைவாக 10,774 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் :
சந்திர பிரியங்கா ( என்.ஆர்.காங்கிரஸ்) : 10,774
ஏ.மாரிமுத்து ( காங்கிரஸ்) : 8,560
வி.விக்னேஸ்வரன் (சுயே) : 5,606
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரிவந்தார் டாக்டர் வி.விக்னேஸ்வரன். ஆனால் இந்த தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் விக்னேஸ்வரன் சுயேச்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா மறைந்த முன்னாள் அமைச்சர் மு.சந்திரகாசு மகள் ஆவார். கடந்த 2016 பேரவைத் தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2-ஆவது முறையாக 2021 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.