மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இளையான்குடி கீழாயூர் காலனியைச் சேர்ந்தவர் வாகித், மனைவி காதர்பாத் இவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த இவர் விடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இளையான்குடி கீழாயூர் காலனியில் தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு.
அப்போது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென வீடு முழுவதும் பரவி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு சம்பவம் நடைபெறவில்லை.
இச் சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் காதர்பாத் புகார் செய்தார்.
முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.