தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஜூலை 16-ல் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்துகிறார். 
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு: ஜூலை 16-ல் முக்கிய ஆலோசனை


சென்னை:  தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்துகிறார். 

கடந்த ஆண்டு மார்ச் முதல் கரோனா தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகளும் நடத்த முடியாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அனைத்து தரப்பிலும் 50 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க அரசு திட்டமிட்டது. இதேபோல, பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும். முதலில், 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதேநேரம், அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றாா். 

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில், தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகளை திறப்பது தொடர்பாக நாளை மறுநாள் (ஜூலை 16) பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை, இலவச பாடப்புத்தகம், மடிக்கணினி வழங்குதல், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது, சிறப்பு எழுத்தறிவு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா ஆலோசனையில் ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com