கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு முடிவுகள்: உயர்நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 29th July 2021 03:18 PM | Last Updated : 29th July 2021 03:18 PM | அ+அ அ- |

சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் மதிப்பெண்கள் பெற தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்படும் மாணவர்கள் இந்த நீதிமன்றத்தை அணுக எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.