திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காவல் துறையினர் நடத்திய வாகனச்சோதனையில் லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணமா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பெஸ்ட் காட்டன் மில் அருகே காவல் துறையினர் வியாழக்கிழமை அதிகாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சிமெண்ட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், லாரியில் கட்டுக்கட்டாக பணமும், ரேசன் அரிசியும் இருந்தது தெரியவந்தது.
லாரி ஓட்டுநர் ராகவன்
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் கேரளம் மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த சாணக்கரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராகவனை(54) காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், ராகவனிடமிருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது ஹவாலா பணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் தாராபுரம் காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.