கோவை: கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கோவை ஆட்சியராக பணியாற்றி வந்த எஸ்.நாகராஜன் நில நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக தென்காசி ஆட்சியராக பணியாற்றி வந்த மருத்துவர் ஜி.எஸ்.சமீரன் நியமிக்கப்பட்டார்.
கோவையின் புதிய ஆட்சியராக மருத்துவர் ஜி.எஸ்.சமீரன் புதன்கிழமை பொறுப்பெற்றுக்கொண்டர். கோவையின் முன்னாள் ஆட்சியர் எஸ்.நாகராஜன் புதிய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார்.
பின் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால் கோவையில் தினசரி கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு 4 ஆயிரத்தில் இருந்து 1,500 ஆக குறைந்துள்ளது.
கோவையில் கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனா நோய்த் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்தவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநகராட்சியைப் போன்று ஊரகப் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.