புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை கல்வித் துறை வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் கரானா தொற்று காரணமாக கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020 -ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 2020-21 கல்வி ஆண்டுக்கு கட்டணமாக கடந்து 2019-20 கல்வியாண்டில் கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீதம் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா பரவி வரும் சூழலில், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நிகழ் கல்வியாண்டிற்கான கட்டணக் குழு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் வசூலிக்கலாம்.
அதனை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணை முறைகள் மூலம் வசூளிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் தனியார் பள்ளிகள் ஆண்டு கட்டணம், பேருந்து கட்டணம், சீருடைகள், கூடுதல் பாடத்திட்ட கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், விளையாட்டு மற்றும் மருத்துவ கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்கக் கூடாது.
பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்கும் வரை இதனை வசூலிக்க கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.