தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதால் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எல்.கே.சுதீஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மக்கள்நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.