புதுச்சேரியில் 350 வெண்டிலேட்டர்கள், 1800 ஆக்ஜிசன் படுக்கைகள் உள்ளது என்றும், மத்திய அரசு புதுவை அரசுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மருந்தகத்தில், மத்திய அரசு வழங்கிய 7 வெண்டிலேட்டர்களை பெற்று, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு அனுப்பியுள்ள 7 வென்டிலேட்டர்கள் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 வெண்டிலெட்டர்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் 350 வெண்டிலெட்டர்களும்,1800 ஆக்ஜிசன் படுக்கைகளும் உள்ளன.
தினந்தோறும் 8000 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.
புதுச்சேரியில் அனைத்து மருந்துகளும் தேவையான அளவு உள்ளது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தால் கரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது, சில கூடுதல் தளர்வுகள் வாகன பழுது செய்பவர்கள், சுய தொழில் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும் என்றார் ஆளுநர்.