திருவள்ளூர்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு முகக்கவசம், கிருமிநாசினி புட்டிகள்,தெர்மா மற்றும் ஆக்சிமீட்டர் ஆகியவைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கல்விமேம்பாடு, உயர்கல்விக்கு ஏதுவான சூழல் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடனும் இணைந்து ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் பங்கேற்று அரசு பள்ளிகளுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, தெர்மா மீட்டர், ஆக்சி மீட்டர் ஆகியவைகளை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு உபகரணங்கள் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | சாலையோரத்தில் வண்ணம் தீட்டி பொம்மை விற்கும் ராஜஸ்தான் பெண்கள்!
இதில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நா. பூபால முருகன், ஐ.ஆர்.சி.டி.எஸ் நிறுவனத்தின் செயலர் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுர் ஆர்.எம்.ஜெ அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை செல்வி, சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் ஆகியோர் உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.