திருச்சி விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபையில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அதில் பயணித்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் பயணித்த கடலூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வினோத், கள்ளக்குறிச்சியை சேர்ந்த இப்ராஹிம் மகன் சாகுல் ஆகிய இருவரும், தங்களது உடைமைகளுக்குள் மறைத்து, சுமார் 4 கிலோ தங்கத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.92 கோடி ஆகும்.
தங்கம் கடத்தி வந்த இருவரிடமும், அற்றை இருவருமே அவர்களுக்காகவே கடர்த்திவந்தனரா? அல்லது வேறு யாரிடம் இருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா போது முடக்க காலத்திலும் குறையாத தங்கக் கடத்தல் :
திருச்சி விமான நிலையத்தில், கடந்த 15 மாதங்களில் கரோனா பொது முடக்க காலத்திலும், மீட்பு விமானங்கள் மூலம் ரூ 43 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.