
வேலூர்: சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார் செய்ததால் 16 நாள்களுக்கு முன் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கணவனின் உடல், உடற்கூராய்வுக்காகத் தோண்டி எடுக்கப்பட்டது.
வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பேபிகலா - சோமசேகர் தம்பதியர்.
இருவருமே ஏற்கெனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்துக்கு பின்னர் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்குப் பின்னர் பேபிகலாவை வீட்டில் அடைத்து வைத்து சோம சேகரும் அவரது தாயும் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி பேபி கலா பாகாயம் காவல் நிலையத்தில் கணவன் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளார்.
பின்னர் அன்றைய தினமே பேபி கலா சென்னையிலுள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், கடந்த மாதம் 28 ஆம் தேதி பேபி கலா தனது உறவினர்களுடன் பாகாயம் காவல் நிலையம் சென்று கணவரை அழைத்து விசாரணை செய்து சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார்.
அப்போது போலீசார் ஏப்ரல் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சோமசேகர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் சுடுகாட்டில் அடக்கம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேபி கலா காவல் நிலையத்தில் கதறி அழுதுள்ளார்.
பின்னர் கணவர் இறப்பு குறித்து மாமியார் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்து இருக்கிறார்கள். பின்னர், கணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 16 நாள்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் இன்று வருவாய்த் துறை மற்றும் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.