சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற சேரன் விரைவு ரயிலில் 2 பெட்டிகளின் இணைப்பு துண்டானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியதாகவும், ஓட்டுநரின் சாதுர்யத்தால் ரயிலை நடைமேடையில் நிறுத்தியதால் பெரிய அளவிலான ஆபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்திலிருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்கு கடந்த போது 7 மற்றும் 8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் கேட்டதாம். இதனால் ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பதற்றம் அடைந்தனர். ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று 2 பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கிகள் பலத்த சத்தத்துடன் துண்டானது.
இதையடுத்து ரயில் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை நிறுத்தியதால் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து சென்னை-பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைத்து, அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவை நோக்கி புறப்பட்டு சென்றது.
இதனால் பல்வேறு இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் ரயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.