2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் முதல் கையெழுத்திடப்படும் என கூறினர். ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதை செய்யவில்லை. பூரண மதுவிலக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் தமிழகத்தில் உள்ள குடும்பப் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அறிவித்தது. அதுதான் அவர்களுக்கு கூடுதல் வாக்கையும் பெற்று தந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அனைத்து பெண்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது அந்த திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.
ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்கிறார்கள். இதன் மூலம் 100 பேரில் 99 பேருக்கு உதவித் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. பெண்கள் யாரும் மாதந்தோறும் ரூ.1000 வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. மக்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுக இந்த வாக்குறுதியை அறிவித்தது. அந்த வாக்குறுதியை திமுக காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் வரக்கூடிய மக்களவைத் தேர்தலை திமுக எதிர்கொள்ள முடியாது. பெண்களிடம் வாக்கு கேட்கும் உரிமையை திமுக இழந்து விடும்.