
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலையர் மேடு பகுதியில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்பிலான சொத்துகள் அறநிலையத் துறை அதிகாரிகள் மூலமாக புதன்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் காஞ்சிபுரம் கிளைக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1218 சதுர அடி இடம் காஞ்சிபுரம் பாலையர்மேடு ஒத்தவாடை தெரு பகுதியில் இருந்தது. இந்த இடத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹரிதாஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் சரக அறநிலையத் துறை உதவி ஆணையர் சந்திரன் சொத்தை மீட்குமாறு ஆலய நிர்வாகங்கள் பிரிவு தனி வட்டாட்சியர் ராஜனுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன், அமுதா, பூவழகி, ஆய்வாளர் பிரித்திகா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஹரிதாஸிடமிருந்து மீட்டு பூட்டி சீல் வைத்தனர்.
இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் அந்த சொத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.
இந்த நடவடிக்கையின் போது மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ராஜீவ்குமார் ராஜேந்திரன், மேலாளர் சந்தானம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேசுவரன், துணை வட்டாட்சியர் ஹரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.