மதுராவிலுள்ள கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா தகராறு தொடர்பான மொத்தம் 16 சிவில் வழக்குகளை அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மதுரா மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி மயங்க் குமார் ஜெயினுக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒதுக்கியுள்ளார், நவ. 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதி முன் வந்த மேலும் இரு வழக்குகளையும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கே ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த பதிவாளர், உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிப்பதில் நேரிட்ட தாமதத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பான இந்த வழக்குகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். எனினும், இது சரியான நடைமுறை அல்ல, எல்லாராலும் உயர் நீதிமன்றத்துக்குப் பயணம் செய்ய முடியாது என்று மசூதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணையை வரும் நவ. 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவிருக்கிறது.
விசாரணையில் தாமதத்தைத் தவிர்க்க இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பாக, மதுராவிலுள்ள வெவ்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. பொதுவாக, கிருஷ்ணர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில்தான் ஈத்கா வளாகம் கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் கோவில் இருந்ததாகவும் இந்த வழக்குகள் குறிப்பிடுகின்றன.