குழந்தைகளைக் கல்லூரிகளில் சேர்க்க நகைகளை விற்கும் பெற்றோர்!
By DIN | Published On : 18th May 2023 01:41 PM | Last Updated : 18th May 2023 01:41 PM | அ+அ அ- |

கோவை: குழந்தைகளைக் கல்லுரியில் சேர்ப்பதற்காக நாளொன்றுக்கு 10 முதல் 12 கிலோ பழைய தங்க நகைகள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரே வாரத்தில் ரூ.5 முதல் 6 கோடி வரை பழைய நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் முதலீட்டில் முக்கியத்துமான தங்கம். மண்ணுல போட்டதும், பொன்னுல போட்டதும் என்றைக்கும் வீணாப்போகாது என்று சொல்வார்கள். அப்படி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பெரும் சேமிப்பாக பார்க்கப்படுவது தங்கம். அவர்கள் தங்களின் அவசர பொருளாதார தேவைக்காக முதலில் கையில் இருக்கும் தங்கத்தையே அடகு வைப்பார்கள் அல்லது விற்று செலவு செய்வார்கள்.
பிள்ளைகளின் கல்விக்காக நகைகளை விற்கும் பெற்றோர்கள்
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நகைக் கடைகளுக்கு பழைய நகைகள் விற்பனை செய்வது அதிகரித்திருக்கின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் உயர் கல்விக்காக மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரிகளில் நன்கொடை, கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்களிடம் உள்ள நகைகளை நகைக்கடைகளில் விற்று வருகின்றனர். அடகு வைத்தால் வட்டி உள்ளிட்ட நிதி நெருக்கடியில் தள்ளப்படுவோம் என்பதால், நகைகளை விற்று பணத்தை பெற்றுச்செல்கின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளில் சேர்க்கை நடந்து வரும் நிலையில், நகைக் கடைகளில் பெற்றோர்கள் பழைய நகைகளை விற்பனை செய்வது அதிகரித்து வருக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ அளவிலான தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை இருக்கும் என தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
மே மாதங்களில் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பதற்காக பெற்றோர் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொண்டு கல்லூரிகளில் சேர்த்து வருவது வழக்கமானதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்க நகைகளை விற்பனை செய்து பணத்தைப் பெற்று தங்கள் குழந்தைகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.