புதுதில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(ஏப்.2) ஆஜரான திரைப்பட இயக்குநர் அமீரை, தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 9-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.தமிழக திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதற்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயார் என அமீர் தெரிவித்திருந்த நிலையில், புதுதில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்.2) அமீர் ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஜாபர் சாதிக், அவரது சகோதரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என அமீரிடம் என்சிபி அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
அவரது வாக்குமூலத்தை விடியோ பதிவுசெய்த அதிகாரிகள், ஜாபரின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக அவரின் போனை ஆய்வுசெய்த அதிகாரிகள், தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதற்கு 2-3 நாள்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர் இயக்கி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.