கோவையில் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்து மற்றும் பணத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகம் நடத்தி வருகிறார்.தொழிலதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் ரூ. 200 கோடி சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், ரூ.100 கோடி பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.
தனது சொத்துக்கள் மோசடி செய்யப்படுவதை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்தனர்.இதில் முக்கிய குற்றவாளியான அஸ்வின்குமார் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக உள்ள நிலையில்,அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா,மருமகன் சக்தி சுந்தர் ஆகிய
3 பேரை போலீசார் புதன்கிழமை கைது செய்து குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.