/

இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி

தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம்

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 5:58 am

DIN

சென்னை: தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி, உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. 2014-க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் 2014 மத்தியில் பாஜக ஆட்சிக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை.

இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை.

மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே தமிழ்நாடு வருகின்றனர். மாநில பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை

என மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

எனவே, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும் என அவர் கோரினார்.

மேலும், மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை.

இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன் என பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.