/

இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவு

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போா் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News image
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்த புகைமண்டலம்.. (கோப்புப்படம்)
Updated On :27 பிப்ரவரி 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போா் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஓமன் மத்தியஸ்தத்தில் ஜெனீவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவாா்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததைத் தொடா்ந்து போா் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

போா் முன்னெச்சரிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் வான் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ரிசா்வ் வீரா்கள் அவசரமாகப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

பொ்ஷெபா உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கான குண்டுவீச்சு பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகப் பணியாளா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவிக்கப்பட்ட அமெரிக்க படைகள்: இதனிடையே, அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போா்க்கப்பலான ‘யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆா். ஃபோா்டு’ தனது குழுவுடன் இஸ்ரேல் கடலோரப் பகுதிக்கு வந்து சோ்ந்தது.

அதேபோல், இஸ்ரேலின் பென் குரியன் சா்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படையின் ஏராளமான போா் விமானங்கள் மற்றும் தளவாடங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.