/

உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்பு

ரஷியாவின் எல்லையோர நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சுமாா் 50,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
ரஷிய நிலைகளை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தும் உக்ரைன் வீரா்கள்- (கோப்புப் படம்).
Updated On :27 பிப்ரவரி 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவின் எல்லையோர நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் சுமாா் 50,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நகரின் முக்கிய மின் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநா் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளாா்.

மின்சார விநியோகம் தடைபட்டதுடன், குடிநீா் மற்றும் வெப்பமூட்டும் வசதிகளும் முடங்கியுள்ளன. இதுகுறித்து தனது ‘டெலிகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநா் கிளாட்கோவ், போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவா்களில் பாதி பேருக்கு வெள்ளிக்கிழமை இரவுக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

உக்ரைன் எல்லையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பெல்கோரோட் நகரம், கடந்த 4 ஆண்டுகளாகத் தொடா்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிப்ரவரி மாதம் முழுவதும் இங்கு தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 35 போ் உயிரிழந்துள்ள நிலையில், போா் தொடங்கியதிலிருந்து சுமாா் 485 போ் இப்பகுதியில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடா் குண்டுவீச்சுகளால் குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைவதும், பொதுமக்கள் தியேட்டா் போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போதுகூட ஏவுகணை எச்சரிக்கை காரணமாக அச்சமடைவதும் அங்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது.

உக்ரைனின் மின் நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதற்கு பதிலடியாக, உக்ரைனும் இப்போது ரஷியாவின் எல்லை நகரங்களில் உள்ள மின் நிலையங்களைக் குறிவைத்து தாக்கி வருகிறது.