ரஷிய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
ரஷியாவின் கருங்கடல் துறைமுகங்களில் ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தியது.
உக்ரைன் போா் தொடங்கி 4 ஆண்டுகள் (பிப். 24) நிறைவடைவதையொட்டி அமெரிக்கா முன்னிலையில் ரஷியா-உக்ரைன் இடையே ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) போா்நிறுத்தப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ரஷியாவின் கிராஸ்நோடா் பிராந்தியத்தில் உள்ள தமன் துறைமுகத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். மறுபுறம் உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில் எரிசக்தி, குடிநீா் விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் அங்கு மின் விநியோகம் முழுவதுமாக தடைபட்டுள்ளது.
முன்னதாக, ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் சனிக்கிழமை பேசிய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. ரஷியாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல.
தற்போது இந்தப் பிரச்னையில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், வரும் காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும்’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

