புதுதில்லி: மத்தியில் அடுத்து அமைய இருக்கும் அரசாங்கம் கோடீஸ்வரர்களின் ஆட்சியா? அல்லது 140 கோடி மக்களின் ஆட்சியா? என்பதை உங்களின் வாக்குதான் தீர்மானிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டை விட ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மத்தியில் அடுத்து அமைய இருக்கும் அரசாங்கம் கோடீஸ்வரர்களின் ஆட்சியா? அல்லது 140 கோடி மக்களின் ஆட்சியா? என்பதை உங்களின் வாக்குதான் தீர்மானிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
என் அன்பான நாட்டு மக்களே!
நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை(ஏப்.26) நடைபெறுகிறது.
அடுத்த அரசாங்கம் 'சில கோடீஸ்வரர்களின் ஆட்சியா?' அல்லது '140 கோடி மக்களின் ஆட்சியா?' என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும்.
எனவே, இன்று வீடுகளை விட்டு வெளியேறி, 'அரசியலமைப்புச் சட்டத்தின் சிப்பாயாக' மாறி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.