திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மப்பேடு காவல்நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு அருகே மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலை அந்தப் பகுதியைச் சேர்ந்த வேல் என்பவர் கட்டி வருகிறார். அதனால் கட்டுமானப் பணிக்காக செங்கற்கள் இறக்கி வைத்துள்ளதால், அதை பாதுகாப்பதற்காக கோயிலுக்கு காவலாளியாக முதியவர் செல்வம் (69) கடந்த 2 நாள்களாக வேலை பார்த்து வந்தாராம்.
இந்த நிலையில்,சனிக்கிழமை காலையில் அந்த வழியாக சென்ற மக்கள், கோயில் பின்புறமாக காவலாளி செல்வம் தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து மப்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மப்பேடு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த முதியவரின் சடலத்தை மீட்டு உடல்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், முதியவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்ததுள்ளார்.
இதற்கு முன்பு மேட்டு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கோயில் கட்டுமானப்
பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த முதியவரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் குறித்தும்,கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து மப்பேடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.