வேதாரண்யம்:வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 93-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யாத்திரை குழுவினர், காங்கிரஸார் பங்கேற்றனர்.
உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930, ஏப்ரல் 30 ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர்.
இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி,மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழாண்டில், அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூண் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, பி. வி. ராசேந்திரன் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.