கோயில் யானை என நினைத்து காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்கச் சென்ற பக்தர்!
கோவை மாவட்டம் மருதமலையில் கோயில் யானை என நினைத்து காட்டு யானைக்கு பிரசாதம் கொடுக்கச் சென்ற பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் கூச்சலிட்டதால் உயிர்த்தப்பினார்.
கோவை மாவட்டம் மருதமலை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழ்க் கடவுள் முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்க கோயிலாகும்.
இந்தக் கோயிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு வாகனங்கள் செல்லும் மலைப் பாதை மற்றும் படிக்கட்டு பாதையில் ஒற்றையாகவும், கூட்டமாகவும் யானைகள் கடந்து செல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
மாலை ஆறு மணிக்கு மேல் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். மேலும், கோயிலுக்கு செல்லும் வழியை மறைத்து நிற்பதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு செல்லும் பாதை அருகே வலதுபுறத்தில் உள்ள பொதி சுமந்து செல்லும் கழுதை பாதை என்று கடந்த காலங்களில் அழைக்கப்பட்ட மண் பாதை தற்போது கட்டடங்களுக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் மண்பாதையில் இன்று(ஆகஸ்ட் 1) காலை 6 மணி அளவில் ராஜகோபுரம் பின்புறத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானையை கண்ட பக்தர் ஒருவர் கோவில் யானை என்று நினைத்து அதற்கு பிரசாதம் கொடுக்க சென்று உள்ளார்.
இதனைக்கண்ட சக பக்தர்கள் அவரைக் கூச்சலிட்டு அது காட்டு யானை என்று அவரை எச்சரித்தனர். இதனால், உணவு கொடுக்காமல் திரும்பியதால் நல்வாய்ப்பாக அவர் உயிர்த் தப்பினார்.
அங்கு இருந்தவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் யானை அங்கு இருந்து திரும்பி சென்றபோது துதிக்கையால் கீழே இருந்த பொருளை தட்டி விட்டு, துதிக்கையை மேல் நோக்கி உயர்த்தி விட்டு சென்றது. அதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் விடியோ பதிவு செய்து உள்ளார். அந்தக் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.