சின்னத்திரை நடிகை ஷோபனா, பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணம் சென்றபோது அங்கு கல்விச் சுற்றுலாவுக்கு வருகைபுரிந்த அரசுப் பள்ளி மாணவிகள், ஷோபனாவைக் கண்டதும் அவரிடம் ஓடிவந்து பேசினர்.
மாணவிகளுடன் கைக்குலுக்கி அவர்களிடம் நலம் விசாரித்து ஷோபனா கலந்துரையாடினார். தங்களின் நாடகத்தை பார்ப்பதாகவும், தங்களை வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஷோபனாவிடம் மாணவிகள் தெரிவிப்பதை உடன் இருந்தவர் விடியோ பதிவு செய்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷோபனா முத்தழகு பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் வைஷாலி தணிகா, லக்ஷ்மி வாசுதேவன் உள்ளிட்டோரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிராமத்தில் வளர்ந்த முத்தழகு என்ற இளம்பெண், நகரத்து பின்னணி கொண்ட நாயகனை திருமணம் செய்துகொண்டு நகரத்துக்கு வருகிறார். அங்கு நாயகனை விரும்பிய பெண் ஒருவர், முத்தழகுக்கு செய்யும் இடையூறுகளே இத்தொடரின் மையக்கரு.
கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிப்பதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அதிக அளவு முத்தழகு தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர்.
தற்போது தஞ்சாவூர் சென்ற நடிகையை பெரிய கோயிலில் சுற்றுலாவுக்குச் சென்ற மாணவிகள் சூழ்ந்து நின்று வரவேற்பளித்தனர். மாணவிகளுடனும் நடிகை ஷோபனா கலந்துரையாடினார்.
இது தொடர்பான விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷோபனா, தங்களின் அளவற்ற அன்பின்மூலம் என் இதயத்தைக் கொள்ளையடுத்தனர் இந்த பள்ளி செல்லும் குட்டிக் குழந்தைகள். அவர்களிடன் செல்போன் இல்லை. ஆனாலும் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். அதனால், நான் என் செல்போனிலேயே அந்த படங்களை எடுத்துக்கொண்டேன். மிக அழகான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.