
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பெண்கள் உள்பட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தவழியே வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
இந்த நிலையில், படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில் லெட்சுமி என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.