
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை (ஜூன் 15) முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஆகியவற்றிற்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலத்தில், மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பாா், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நாள்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்ததையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனர். தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதால், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.