காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்களை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோயில் பரம்பரை அறங்காவலரான பாலாஜி என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.இவர் மீது கோயில் நிர்வாக குளறுபடிகள் மற்றும் கோயில் சொத்துக்களில் தவறான மேலாண்மை, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது போன்ற புகார்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு வந்தது.
இதையடுத்து புகார்களின் பேரில் காஞ்சிபுரம் மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி பாலாஜியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு தற்காலிகமாக காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் தியாகராஜனை தக்காராக நியமித்து நிர்வாக பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.
அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் அதிகாரிகள் இரண்டு கோயில்களையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.