உத்தரபிரதேசத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டவர்களிடம் இருந்து விவகாரத்து பெற்ற தனது மகளை மேள வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும்பெருளாகி உள்ளது.
ஆணாதிக்க சமூகத்தின் நெறிமுறைகளை உடைத்து, உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெண் ஒருவர் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி அனில்குமார். இவரது மகள் ஊர்வி(36) புதுதில்லி உள்நாட்டு விமான நிலையத்தில் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு கணினி பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தில்லியில் வசித்து வந்த இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு ஊர்வியின் மாமியார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது ஊர்வி குடும்ப வாழ்க்கையில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இருப்பினும் எட்டு ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டும் குடும்பம் நடத்தி வந்த ஊர்வி, துணிச்சலுடன் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
"எங்கள் குடும்ப உறவைக் காப்பாற்றுவதற்கான எனது முயற்சிகளில், நான் கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களைத் தாங்கினேன், ஆனால் இறுதியில், அது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது," என்று ஊர்வி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாமியார் வீட்டில் சித்திரவதையை அனுபவித்து வந்தவர் சட்டப்பேராட்டத்திற்குப் பிறகு ஆணாதிக்கம் கொண்டவர்களின் முகத்தில் அறைந்து, தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிய தனது மகளின் முடிவை வரவேற்று அவரது தந்தை அனில் குமார் பட்டாசுகளை வெடித்தும் இசைக்கருவிகளை இசைத்தும் மேள வாத்தியங்கள் முழங்க தனது வீட்டிற்கு ஊர்வலமாக மகிழ்ச்சியுடன் அழைத்து வந்த தந்தையின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும்பெருளாகி உள்ளது.
இதுகுறித்து அனில்குமார் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு அவளை இப்படிதான் திருமண செய்து வைத்து அனுப்பி வைத்தோம். அதைபோலவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வரும் அவளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வரவேற்றோம். தற்போது அவள் வலிமையுடனும் கண்ணியத்துடனும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே எங்களது நம்பிக்கையும், வேண்டுதலும்” என்று தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோரின் வரவேற்பால் நெகிழ்ந்துபோன ஊர்வி, அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்ததோடு, தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என்று தெரிவித்தார்.