கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கினார் நடிகர் விஜய்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(மே.6) வெளியாகின.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்க இருப்பதாக எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளை குவித்து, வருங்கால சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
விரைவில் நாம் சந்திப்போம்! என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.