பல ஆண்டுகளாக பல பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் மேலும் ஒரு பெண், தன் தாயை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், தன்னையும் விடியோ அழைப்பில் ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்தியதாகவும் காவல்துறையிடம் விவரித்துள்ளார்.
பிரஜ்வல், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். மேலும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கெளடாவின் பேரன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் உறவினர்.
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக 2019-இல் பிரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். இவர் கட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்களிக்கும் நாளில் பிரஜ்வலின் சில புகைப்படங்களும் விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின.
பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகங்களின் கவனம் அதிகரித்ததால், ஏப்ரல் 27 அன்று, கர்நாடக அரசு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா டிப்ளமேட்டிக் விசா மூலம் ஜெர்மனி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், கர்நாடக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் ”பிரஜ்வல் என்னை அழைத்து என் ஆடைகளை கழற்றும்படி கேட்பார். அவர் என் தாயின் மொபைலில் இருந்து அழைத்து, விடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்க என்னைக் கட்டாயப்படுத்துவார். நான் மறுத்தபோதும், எனக்கும் என் தாய்க்கும் பிரச்னையை ஏற்படுத்துவேன் என்று கூறி மிரட்டுவார்" என்று குற்றஞ்சாட்டியுள்ளர்.
பிரஜ்வல் ரேவண்ணா தனது தந்தையின் வேலையை பறிக்கப் போவதாக மிரட்டி தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, தனது தந்தை வேலையில் இருந்து நீக்கப்பட்டார். தனது தாயார் எச்.டி.ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
"என் அம்மா நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார். அவர் மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார், எங்களது தாய் எங்களை அதிகாலை 1 அல்லது 2 மணிக்கு மட்டுமே போனில் அழைப்பார். அவள் எங்களிடம் பேசுவது அரிது. அவர்கள் என் தாயை ஒரு அடிமை போல நடத்தி, என் தந்தையை தாக்கினர் "என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஒரு உதவி எண்ணை வெளியிட்டுள்ளது, அதில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து தங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். அடையாளம் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.