![முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்(கோப்புப் படம்)](http://media.assettype.com/dinamani%2F2024-05%2Ff6ec3207-2687-4538-a8eb-4f4c86b0da04%2Frajesh_das.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீஸாா் கைது செய்தனர்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தித் துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, ராஜேஷ் தாஸைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறாா். சென்னை அருகே தையூரில் பீலாவுக்கு பங்களாவுடன் கூடிய பண்ணை உள்ளது. அந்த வீட்டில் பணியாளா்களும், காவலாளிகளும் மட்டும் தற்போது உள்ளனா். பீலா சென்னையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா்.
இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா ஒரு புகாா் அளித்தாா். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18-ஆம் தேதி தனது நண்பா்கள் சிலருடன் தையூரில் உள்ள வீட்டில் காவலாளியை கீழே தள்ளிவிட்டு அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியின் கைப்பேசியைப் பறித்து மிரட்டியதாகவும் கூறியுள்ளாா்.
அதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசா மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.