
இஸ்ரேலில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிநவீன இயந்திரம் மூலம் இளமையான தோற்றத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்து ரூ. 35 கோடி வரை ஏமாற்றிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி, இஸ்ரேலில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி 60 வயதான ஒருவரை 25 வயதினராக மாற்றுவதாகக் கூறி சிகிச்சை மையம் ஒன்றை ஆரம்பித்தனர்.
ராஜிவ் குமார் துபே, அவருடைய மனைவி ராஷ்மி துபே ஆகியோர் கான்பூரில் புதுவகையான சிகிச்சை மையத்தை தொடங்கி, ‘ஆக்ஸிஜன் சிகிச்சை’ மூலம் முதியவரை, இளைஞராக மாற்ற முடியும் என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்தனர்.
வாடகைக்கு குடியிருந்துவந்த இந்த தம்பதியினர், மாசடைந்த காற்றுதான் விரைவில் முதுமையடைவதற்கு காரணம் என்று தெரிவித்து மக்களை ஏமாற்றினர். ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் சில மாதங்களிலேயே இளமையை மீட்டுத் தருகிறோம் என்றும் தெரிவித்தனர்.
அவர்கள் ‘ஆக்ஸிஜன் சிகிச்சை’ செய்வதற்கு ரூ. 90,000 கட்டணமாகவும், நண்பர்களை பரிந்துரை செய்தால் கட்டணக் குறைப்பு செய்யப்படும் எனவும் விளம்பரம் செய்துள்ளனர்.
இவர்களிடம் 10.75 லட்சம் வரை கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்மணி ரேணு சிங் காவல்துறையினரிடம் அளித்த புகாரால் இந்த ஏமாற்று சம்பவம் வெளியே வந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 35 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரேணு சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மோசடி வழக்குப் பதிவு செய்து தம்பதியினரை தேடி வருகின்றனர். தம்பதியினர் துபைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.