
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை (ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995 வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்ததால் சட்ட வடிவம் பெற்றது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இதுவரை 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி, ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக என பல்வேறு கட்சிகள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இந்த மனுக்கள் நாளை(ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அசாம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியாணா, உத்தரகண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களவை இருந்து வக்ஃப் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு!!