அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை
Published on
Updated on
2 min read

புது தில்லி: அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வந்தது.

ஆனால், அதை அளிக்க முடியாத கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியா எடுத்துரைத்தது. இதனால், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவையும் கடந்து இழுபறி நீடித்தது. அதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தாா். இது ஆகஸ்ட் 7 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, மொத்த வரி விதிப்பை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

பின்னா், இந்த கூடுதல் வரி விதிப்பை 3 வாரங்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒத்திவைத்தாா். அதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே மார்ச் மாதத்தில் தொடா்ந்து வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க குழு ஆக.25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உள்பட 50 சதவீத வரி புதன்கிழமை(ஆக.27) அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில், 6-ஆம் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க குழு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உள்பட 50 சதவீத வரி விதிப்பு தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பது ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) அமல்படுத்துவது, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்துவது என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஏற்றுமதியாளா்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கும் திட்டம், ஏற்றுமதி கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது என ஏற்றுமதியாளா்களுக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையிலான முன்னெடுப்புகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பட்ஜெட்டில் அறிவித்ததைப்போல் ரூ.25,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை (2025-2031) விரைவில் அமல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்த ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கும் என நம்புகிறேன்.

அதாவது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, மேலும் வர்த்தக முன்னணியிலும், வர்த்தக அமைச்சக மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. "நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி வருகிறோம்," என்று கூறினார்.

இருப்பினும், ஒப்பந்தத்திற்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும், "நாட்டின் நலனுக்காக நாம் ஒப்பந்தத்தை செய்தாக வேண்டும்" என்பதே இந்திய தொழில்துறையின் முக்கிய கோரிக்கை என்று கூறினார்.

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா சுமார் 20 சதவீதத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் இந்திய ஏற்றுமதி சுமார் 2.5 சதவீதமாகும். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒரு சுவர் போல நிற்பேன் என்றும், அவர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் ஆகஸ்ட் 15 இல் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Summary

Prime Minister Narendra Modi on August 15 said he will stand like a wall to protect the interests of farmers and fishermen and India will never compromise on their interests.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com