செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீா் மட்ட மொத்த உயரம் 24 அடி, ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடியாகும்.
டிட்வா புயல் காரணமாக வானிலை மைய முன்னரிவிப்பின்படி பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நவ.17 ஆம் தேசி காலை 8 மணியளவில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 30 ஆம் தேதி முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை(டிச.3) நிலவரப்படி நீர் இருப்பு 21.96 அடியாகவும், கொள்ளவு 3110 மில்லியன் கன அடியாகவும்(85.32 சதவீதமாக) உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து காலை 6 மணியளவில் 1,380 கன அடியாக உள்ளது.
தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர்வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். புதன்கிழமை ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதாலும் நீர்வரத்து வினாடிக்கு 1,380 கன அடியாக உள்ளதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து பகுதியில் அமைந்துள்ள சிறு பாசன ஏரிகள் 95 சதவீதம் நிரம்பி உள்ளதாலும், மேலும் வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருப்பதால் புதன்கிழமை காலை 8 மணியளவில் வினாடிக்கு 200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், உபரி நீர் வெளியேற்றம் கூடுதலாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏரியில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chembarambakkam Lake surplus water release increases: Flood warning for coastal residents
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

