

புதுதில்லி: மக்களை பாதிக்கும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மோடி அரசுக்கு தைரியம் இல்லை. தேர்தல் ஆணையம் இல்லாமல் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
நாட்டு மக்களுக்கு வாக்குத் திருட்டு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை(டிச.14) 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' பேரணி நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் பாஜக மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து, "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், தேர்தல் ஆணையத்தின் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கினர்.
பேரணியில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, மக்களை பாதிக்கும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மோடி அரசுக்கு தைரியம் இல்லை.
பாஜகவிற்கு தேர்தல் ஆணையத்தின் உதவி தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் இல்லாமல் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடியாது என்பதே அதற்கு காரணம்.
தேர்தல் ஆணையத்தின் செயல்களின் ஒவ்வொரு கட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் "சதி" குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அழைப்பு விடுத்தவர், பாஜகவால் அவர்களை தொடர்ந்து பாதுகாக்க முடியாது என்றும், அவர்கள் இறுதியில் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், "வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை எதிர்கொள்ளுமாறு பாஜகவுக்கு நான் சவால் விடுகிறேன்." "அப்படி நடந்தால் ஒருபோதும் வெற்றி பெற மாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று பிரியங்கா காந்தி கூறினார்.
பாஜக 'வாக்குத் திருட்டு' மூலம் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதாக குற்றம்சாட்டுவதால், பிகாரில் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு வாக்காளர்கள் மனம் தளரக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பிகாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை தேர்தல் முறைகேடுகளுக்கு ஆதாரமாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ் தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுபவர்களை 'துரோகிகள்' என்று அழைத்தார். வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் அரசியலமைப்பைக் காக்கவும் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் சித்தாந்தத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவது அனைத்து இந்தியர்களின் கடமை என்று கார்கே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.