
புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று மாறியது எப்படி என வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
“பத்து ஆண்டுகளாக ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் பாஜக அரசு காது கொடுத்து கேட்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று(செப்.3) நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ளன.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய பாஜக அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று மாறியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கார்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டியில் 0%, 5%, 12%, 18%, 28% வரி விகிதங்கள் மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% சிறப்பு விகிதங்கள் சேர்க்கப்பட்டதாக கார்கே கூறினார்.
“கடந்த பத்து ஆண்டுகளாக, ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தக் கோரி காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு தற்போது "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என மாற்றியுள்ளது. இதில், 0%, 5%, 12%, 18%, 28% வரி விகிதங்கள் மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% சிறப்பு வரி விகிதங்களும் அடங்கும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்பதை நினைவு கூர்ந்த கார்கே, 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதியமைச்சரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை பாஜக எதிர்த்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியும் கடுமையாக எதிர்த்ததாக கார்கே குற்றம் சாட்டினார்.
ஆனால், சாதாரண மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிகளிலிருந்து ஜிஎஸ்டி வசூல் சாதனையை கொண்டாடிய பாஜக அரசு, நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது வரிகள் விதித்ததாக குற்றம் சாட்டினார். விவசாயத் துறையில் குறைந்தது 36 பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளது என்று கார்கே கூறினார்.
பால், தயிர், மாவு, தானியங்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் புத்தகங்கள், ஆக்ஸிஜன், காப்பீடு மற்றும் மருத்துவமனை செலவுகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு மோடி அரசு வரி விதித்ததால், காங்கிரஸ் ஜிஎஸ்டியை "கப்பர் சிங் வரி" என்று அழைத்ததாக தெரிவித்தார்.
மேலும், நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூலில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது, 64 சதவீதம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து வருவதாகவும், ஆனால் ஜிஎஸ்டியில் மூன்று சதவீதம் மட்டுமே நாட்டின் கோடீஸ்வரர்களிடம் இருந்து வருவதாகவும், அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது," என்று கார்கே கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமான வரி வசூலில் 240 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வசூலில் 177 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி நிலையை மாற்றவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
ஆனால், எங்களது கோரிக்கைகள் காதுகேளாதவர் காதில் விழுந்தது போல் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த தற்போது விழித்தெழுந்துள்ள மோடி அரசு, வரி விகித பகிர்வு குறித்து பேசியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது.
மேலும், வரிகளைக் குறைப்பது மாநிலங்களின் வருவாயைப் பாதிக்கும் என்பதால், 2024-25 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள சிக்கலான இணக்கங்களும் நீக்கப்பட வேண்டும்; அப்போதுதான் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்கள் செய்வோர் உண்மையிலேயே பயனடைவார்கள் என்றும், "ஒரு நாடு, ஒரு வரி" என்பதை "ஒரு நாடு, 9 வரிகள்" என்று பாஜக அரசு மாற்றியது எப்படி என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர நாள் உரையில் பிரதமா் மோடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.