போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Published on
Updated on
1 min read

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வு கால பலன்கள் வழங்கப்படுவதில்லை. இப்போதைய நிலையில் 16 மாத காலம் ஓய்வு கால பலன்கள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றில் பல்வேறு பிரச்சனை உள்ளது.

பணி காலத்தில் தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி பணம் உரிய கணக்குகளில் செலுத்தப்படுவதில்லை. பணிக்கொடை டிரஸ்ட்டுக்கும் பணம் செலுத்தப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கும் பல்வேறு நிலுவைகள் உள்ளன. ஒட்டு மொத்தத்தில் ரூ.15000 கோடி தொழிலாளர்கள் பணம் கழக நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாகும்.

1.4.2003-க்கு பின் பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது அது நிறைவேற்றப்படவில்லை.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆகஸ்ட் 18 முதல் சிஐடியு சார்பில் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு போராட்டத்தை ஒட்டி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சிஐடியு தொழிற்சங்க தலைவர்களை அழைத்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பயன்கள் தீபாவளிக்கு முன்பாக வழங்க அரசு முன்வர வேண்டும், தொழிலாளர்களின் ஒப்பந்த நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது சம்பந்தமாக தொழிற்சங்கங்களோடு அரசு விவாதிக்க வேண்டும், தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் சேர்க்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நிதித்துறையுடன் பேசிவிட்டு தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

ஆனால், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சரியல்ல என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி 32 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

Summary

CPI(M) urges Tamil Nadu government to address transport workers' legitimate demands

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com