இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்னைகளுக்கே முன்னுரிமை: முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்

மாநிலத்தில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நிகழ்ந்த இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கவனிப்பதே தனது அரசாங்கத்தின் முதன்மையான பணி...
மணிப்பூர் முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்
மணிப்பூர் முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்
Updated on
2 min read

இம்பால்: மாநிலத்தில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நிகழ்ந்த இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கவனிப்பதே தனது அரசாங்கத்தின் முதன்மையான பணியாக இருக்கும் என்று மணிப்பூர் முதல்வர் ஒய். கெம்சந்த் சிங் கூறினார்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.

இந்த வன்முறை காரணமாக கடந்த ஆண்டு பிப். 9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பாஜகவைச் சோ்ந்த பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவா் ஆட்சி, வரும் பிப்.12-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூா் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மணிப்பூா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவா் புதன்கிழமை பதவியேற்றாா்.

துணை முதல்வா்களாக பாஜகவை சோ்ந்த நெம்சா கிப்ஜென், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நாகா மக்கள் முன்னணியைச் சோ்ந்த எல் டிகோ ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுடன் பாஜகவை சோ்ந்த கோவிந்த்தாஸ் கோன்தெளஜம், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த கே லோகேன் சிங் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

மணிப்பூா் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், குகி சமூகத்தைச் சோ்ந்த நெம்சா கிப்ஜென் புதிய அரசின் இணைந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-ஜோ அமைப்புகள் சுராசந்த்பூா் மாவட்டம் துய்மோங்கில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவா் அரசில் இணைந்ததாக அவா்கள் புகாா் தெரிவித்தனா். சிறிது நேரத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்காரா்கள் டயா்களுக்கு தீ வைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.

இதனிடையே, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.6) 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு குகி-ஜோ அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், நிலைமையை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஒய். கெம்சந்த் சிங், மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நிகழ்ந்த இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்னைகளைக் கவனிப்பதே தனது அரசின் முதல் முன்னுரிமை பணியாக இருக்கும். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாததே மிகப்பெரிய பிரச்னை. அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்காக அரசாங்கம் விரைவில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

Summary

Manipur Chief Minister Y Khemchand Singh said the top priority of his government was to look into the problems of the people displaced by the ethnic violence in both hill and valley districts.

மணிப்பூர் முதல்வர் ஒய். கெம்சந்த் சிங்
பிப்.13-ல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com