200 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி!

தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்...
திருநெல்வேலியில் புதன்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் புதன்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்.
Updated on
2 min read

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் புதன்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், திமுகவின் ஆட்சி முறை, குடும்ப அரசியல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுகவின் கூட்டணி அச்சமும் 200 தொகுதி இலக்கும்

திமுக வரலாற்றில் இதுவரையிலும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது என்று குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், "மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற சந்தேகம் இருப்பதால்தான் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசுகிறார். ராகுல் காந்தி நண்பர் என்கிறார், ஆனால் ஆட்சியில் பங்கு தர முடியாது என்கிறார். இதிலிருந்தே அவர்களின் அச்சம் தெரிகிறது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.

ஸ்டிக்கர் ஒட்டுவதில் கைதேர்ந்தவர்கள்

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு திமுகவின் அழுத்தத்தால் வந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறுவதை மறுத்த நயினார் நாகேந்திரன், "திமுக எப்போதும் பிறர் செய்த வேலைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் கைதேர்ந்தவர்கள் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் பேசி, கிராமப்புற மாணவர்களுக்காகக் கொண்டு வந்ததுதான் 7.5% இடஒதுக்கீடு. இதற்கு முழு முதற்காரணம் பாஜகவும் அதிமுகவுமே தவிர திமுக அல்ல" என்றார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்ப அரசியல்

முதல்வர் தனது மகனுக்கு உழைப்பைக் கற்றுக்கொடுப்பதாகக் கூறியதைக் கிண்டல் செய்த அவர், "நேற்று கலைஞர், இன்று ஸ்டாலின், நாளை உதயநிதி என இது ஒரு குடும்ப ஆட்சி என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் இனி குடும்ப ஆட்சியை அனுமதிக்க மாட்டார்கள். சபரீசன் போன்றவர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருவதே குடும்ப அதிகாரத்தின் வெளிப்பாடுதான்" என்று சாடினார்.

பொய் பரப்புரை

மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு, "காங்கிரஸ் ஆட்சியை விட 300 மடங்கு அதிகமாக, சுமார் ரூ.14 லட்சம் கோடியைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. 11 வந்தே பாரத் ரயில்கள், நவீன சாலைகள், விமான நிலையங்கள், நெல்லை மருத்துவக் கல்லூரியில் ரூ.300 கோடி மதிப்பிலான கட்டடங்கள் என அனைத்தும் மத்திய அரசின் நிதியால் வந்தவை. தோல்வி பயத்தால் முதல்வர் பொய் சொல்கிறார்" என்று பதிலளித்தார்.

சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு இன்று கஞ்சா மற்றும் சிந்தடிக் டிரக்ஸ் விற்கும் நாடாக மாறிவிட்டது. சொத்து வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் மற்றும் சிறை கைதி மரணங்கள் மட்டுமே திமுக ஆட்சியின் சாதனைகள்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

"லட்டு அல்ல, அல்வா"

பழைய ஓய்வூதியத் திட்டம், அங்கன்வாடி மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் போன்ற எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. "அவர்கள் வாயால் லட்டு கொடுக்கிறார்கள், ஆனால் உண்மையில் மக்களுக்குத் திருநெல்வேலி 'அல்வா' தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2026-இல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Summary

Tamil Nadu NDA alliance will win in 200 seats says Nainar Nagendran

திருநெல்வேலியில் புதன்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தேர்தல் மேலாண்மைக் குழு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com