நோ பார்கிங்கில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 100 ரூபாய் பரிசாம்! இப்படி ஒரு வினோதமான திட்டத்தை மத்திய அரசின் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசும் போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தது என்னவெனில்;
நாடு முழுதும் பெரும்பாலான இடங்களில் முறையான பார்கிங் வசதிகள் மேற்கொள்ளப் படவில்லை. அதனால் வீடுகளிலும், அபார்ட்மெண்ட்டுகளிலும், அலுவலகங்களிலும், தங்களது வாகனங்களை நிறுத்தும் வசதிகளற்றவர்கள் சாலையோரங்கள், பூங்காக்கள், மற்றுமுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் எல்லாம் தங்களது வாகனங்களைப் பார்க் செய்து விடுகிறார்கள், இதனால் நடைபாதைகள் வெகுவாக ஆக்கிரமிக்கப்பட்டு விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மக்களிடையே முறையான பார்க்கிங் வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு அரசு இம்மாதிரியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியதாகி விடுகிறது. மேலும் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு2 மில்லியன் கார்கள் நாடு முழுதும் விற்பனையாகின்றன. எனவே கார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பார்க்கிங் வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் படவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் வெற்றியடையுமா? எனும் கேள்விக்கு;
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என அனைவருக்கும்; முறையான பார்க்கிங் வசதியை மேம்படுத்தும் விதமான மத்திய அரசின் புது திட்டம் குறித்து அறிவித்திருக்கிறோம். சில குடியிருப்பு பகுதிகள் மற்றும் தனியார் அலுவலக வளாகங்களில் எங்களுக்கு பார்க்கிங்க்கு என்று தனி இடம் ஒதுக்கப்படவில்லை. இது வரை கிடைத்த இடத்தில் வாகனங்களைப் பார்க் செய்து கொண்டிருந்தோம்’ எனும்படியான பதில்கள் கிடைத்தன. இனியும் அந்த நிலை நீடிக்கக் கூடாது. எனவே இனி புதிதாக கார்கள் வாங்கிப் பதிவு செய்யும் போதே; முறையான பார்க்கிங் வசதி உண்டு என்பதற்கான சான்றுகளும் சமர்பிக்கப்பட வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதிக்கவிருக்கிறோம். இதற்கான விதிகள் அடங்கிய திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2016 விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Image courtsy: The Tribune