
வங்காளம்!
வங்காளிகள் உறவினர் வீடுகளில் திருமணம் செய்வதில்லை. மாமன் மகள், அத்தை மகனை மணப்பது வங்காளத்தில் கனவிலும் நடக்காது.
வங்காளிகளுக்கு மங்கள நிறம் சிவப்பு. திருமண அழைப்பிதழைச் சிவப்பு மையில் அச்சிடுவார்கள்.
பெண்ணின் நெற்றியிலும் வகிடு எடுக்கும் இடத்திலும் மணமகன் செந்தூர் தடவுவது தாலி கட்டுவதற்குச் சமமான சடங்கு. ஒரு பெண் மணமானவள் மாங்கல்யத்துடன் இருக்கிறாள் என்பதற்கு ஒவ்வொரு நாளும் அவள் வகிடில் பூசிக் கொள்ளும் இந்த குங்குமம்தான் அடையாளம்.
வங்காளிகளின் திருமண நேரம் நள்ளிரவிற்குப் பிறகு விடிவதற்கு முன்பு.
மயிலை மாதவன்.
வெள்ளி
இந்தியாவில் வெள்ளி உலோகம் அதிகம் கிடைக்கும் மாநிலங்கள் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகும்.
தமிழ் இன்பம்!
சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற முதல் தமிழ் நூல் "தமிழ் இன்பம்'. இதை எழுதியவர் இரா. பி. சேதுபிள்ளை. பரிசு பெற்ற ஆண்டு 1965.
சதுரங்க வீராங்கனை
முதன் முதலில் உலக அளவில் சதுரங்கத்தில் வெற்றி பெற்று சதுரங்க வீராங்கனை என்று பட்டம் பெற்ற பெண்மணி ஆர்த்தி ராமசாமி.
தேவ குசுமம்!
வாசனைப் பொருளான கிராம்பு சங்க இலக்கியங்களில் "தேவ குசுமம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம்பு மரத்திலுள்ள மலராத பூ மொட்டுகளை சேகரித்து காயவைத்து கிடைப்பதே நாம் பயன்படுத்தும் கிராம்பு வாசனை பொருள். இது ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
உ. ராமநாதன்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன? என்று என் ஆசிரியர் என்னை கேட்டபோது திருதிருவென்று விழித்தேன்நான். பிறகு அவரே சொன்னார். "எட்டு எட்டா போனா நாலு எட்டிலே அதை அடைந்து விடலாம். அதாவது 8848மீட்டர்''. ஆசிரியர் இந்த நம்பரை மட்டுமே சொல்லியிருந்தால் நான் அதை மறந்திருப்பேன். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நம்பர் என் நினைவில் இருக்கிறது என்றால் அதற்கு ஆசிரியர் சொல்லி கொடுத்த முறையே காரணம்.
* "அ' வுக்கு அடுத்தது "ஆ' வருவதற்கு காரணம் அரசனும் ஆண்டியாவான் என்பதை நமக்கு உணர்த்தத்தான். "இ' க்கு பிறகு "ஈ' வருவதன் காரணம், இருப்பவன் ஈய வேண்டும் என்று சொல்லத்தான். "உ' வுக்கு பிறகு "ஊ' வருவதன் காரணம் உழைப்பே ஊக்கம் என்று கூறத்தான். "எ'க்கு பிறகு "ஏ' வருவதன் பொருள் எதையும் ஏன் என்று யோசித்து பார்க்கவே. "ஐ' மட்டும் தணித்து நிற்க காரணம் அதற்கு (ஐ) நான் என்ற திமிர் இருப்பதுதான். "ஒ'வுக்கு பிறகு "ஓ' ஏன் வருகிறது என்றால் ஒற்றுமையே ஓங்கும் என்பதை தெரிவிக்கத்தான்.
* பிரபல பாடகர் ஜேசுதாஸ் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாள் அன்று கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று பக்தி பாடல்கள் பாடுவார்.
- அனிதா ராமச்சந்திரன்.
அழிந்து வரும் கழுகுகள்!
இறந்த பின் மனிதர்களை அடக்கம் செய்வதில் புதைப்பது, எரிப்பது என்னும் நடைமுறைகள் உள்ளன. ஆனால் பார்சி மதத்தைப் பின்பற்றுவோர் இறந்த மனிதரின் உடலைக் கழுகுகள் தின்றால்தான் மோட்சம் என நம்புகின்றனர். இதற்காக இறந்தவர் உடலை உயரமான இடத்தில் வைத்து விடுவார்கள். கழுகுகள் வந்து தின்றுவிடும்.
குஜராத்தில் வதோரா பகுதியில் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பழைய நடைமுறையை மாற்றியுள்ளனர். முன்பு இடுகாடு, சுடுகாடு என்பதற்கு பதில் "அமைதி கோபுரம்' என்னும் உயர்ந்த கோபுரத்தில்தான் பார்சிகளின் மரண அடக்கம் நடக்கும்.
இப்போது கழுகுகளே வராததால் பார்சி மதத்தினர் இந்தியப் பாரம்பரியத்திற்கேற்ப உயிரற்ற உடலை எரிப்பது என்னும் முடிவுக்கு வந்து எரிக்கத் துவங்கியுள்ளனர். தற்போது, "அமைதி கோபுரத்தில் பிணத்தைக் கொண்டுபோய் வைத்து சடங்குகள் முடிந்ததும் எரித்து விடுகிறார்கள். இதைத்தவிர வேறு வழி இல்லை'' என்கிறார் பார்சி மதகுரு ரோடி.
* 1982- ஆம் ஆண்டில் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸுக்கு "தனிமையின் நூறு ஆண்டுகள்' என்னும் நாவலுக்கு நோபல் பரிசு கிடைத்தபோது கியூபா அதிபர் பெடல் காஸ்ட்ரோ அவருக்கு ஹவானா நகரில் அழகிய மாளிகை ஒன்றைப் பரிசாக அளித்தார். அவர், தம் வாழ்நாளில் அதிகமான நாட்களை அந்த மாளிகையில்தான் கழித்தார்.
"எனக்கும் பெடல் காஸ்ட்ரோவுக்கும் இடையிலான நட்பு முற்றிலும் இலக்கியப் பூர்வமானது. பெடல் மிகவும் பண்பட்ட மனிதர். நாங்கள் பேசத் துவங்கினால் அதற்கு முடிவே கிடையாது. காலம் திகைத்து நின்று வேடிக்கை பார்த்திருக்க எங்கள் உரையாடல் உருண்டு போய்க் கொண்டிருக்கும்'' என்றார் மார்க்வெஸ்
- தங்க. சங்கரபாண்டியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.