நாள் ஒன்றுக்கு மூன்று கப் காபி குடித்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமே காபிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதிலும், காபி எங்கு நன்றாக இருக்கிறது எனத் தேடிச்சென்று, மணக்க மணக்க காபி அருந்துபவர்கள் ஏராளம். இதற்கிடையே காபி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமா? என தொடர்ந்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழக்கமாக ஒரு புத்துணர்வுக்காக நாம் காபி அருந்துகிறோம். காபியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உடலை நச்சுகளில் இருந்து பாதுகாப்பதாகவும், காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுட்காலம் நீடிப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், காபி குடிப்பதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும், பாயில்டு(Boiled) காபியை விட ஃபில்டர்(filter) காபி மட்டுமே நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
'ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Chalmers University of Technology) மற்றும் சுவீடனில் உள்ள உமயா பல்கலைக்கழகம்(Umea University) மேற்கொண்டுள்ளன.
இந்த ஆய்வில் வெவ்வேறு வயதினர் பலர் பங்கேற்றனர். அவர்களின் ரத்தத்தில் உள்ள மூலப்பொருட்களின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. மேலும், அவர்கள் பல்வேறு வகையான காபிகளை உட்கொண்டனர். இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஃபில்டர் காபி அருந்தியவர்களுக்கு நீரிழிவு நோய்(டைப் 2) ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் மற்ற வகை காபியை அருந்தியவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு மாறுபட்டுள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு கப் காபி அருந்தியவர்களை விட நாள் ஒன்றுக்கு 3 கப் காபி அருந்தியவர்களிடம் அதிக நேர்மறையான விளைவுகள் தோன்றின. அதாவது, நாள் ஒன்றுக்கு 3 கப் காபி அருந்தியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் குறைவு என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.