கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள்?

ஐ.டி துறையில் பணியாற்றுபவர் அதிகம் பேர் தங்களது வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது தற்போதைய டிரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள்?


ஐ.டி துறையில் பணியாற்றுபவர் அதிகம் பேர் தங்களது வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது தற்போதைய டிரெண்ட் ஆகி வருகிறது.  ஆனால்,  இவர்களிலிருந்து சற்று வித்தியாசமானவராக இருக்கிறார் ஆனந்த் மல்லிகாவத். சுயநலமாக யோசிக்காமல் பொதுநலத்துடன் யோசித்ததுதான் அவரின் முதல் வெற்றி.

தான் வசிக்கும் கிராமத்தில் விவசாயிகளுக்காகப் புதிதாக ஒரு பணியை முடித்திருக்கிறார். அப்படி அவர் செய்ததுதான் என்ன?

உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அடைக்கலம் அடைந்துள்ள இடம் பெங்களூரு. ஐ.டி நகரம் என்று மற்ற மாநிலத்தவர்கள் அழைக்கப்படும் ஊர். இங்கு அண்ணாந்து பார்க்கும் கட்டடங்களுக்கு மத்தியிலும் ஒரு அழகான கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் பெயர் 'காஞ்சனஹள்ளி'.

காஞ்சனஹள்ளி ஊரில் உள்ள ஏரிக்கு அருகில்தான் ஆனந்தின் வீடு அமைந்துள்ளது. தினமும் இந்த ஏரி வழியாகத்தான் அலுவலகம் செல்வது வழக்கம்.  சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு போன்று மரங்கள், பறவை இனங்கள் என கண் குளிரக் காட்சி தரும் பகுதியாக இருந்து வந்தது.  36 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் இருந்தது. மற்ற நிலபரப்பில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும், ஆக்கிரமிப்புச் செய்து சிலர் விவசாயம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர். 

1960-ஆம் ஆண்டு ஆய்வுப்படி, பெங்களூரில் சுமார் 262 ஏரிகள் இருந்தன. இன்றைய நிலையில் 81 ஏரிகள் மட்டுமே உள்ளன. அதில் 34 ஏரிகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. நகரமயமாக்கல் காரணமாகவும், ஆக்கிரமிப்பால் ஏரி நாளடைவில் காணாமல் போவதை கண்டு மனம் வருந்தினார். இதற்காக நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமென நினைத்து அதற்கான செயல்களில் இறங்கினார். 

2017-ஆம் ஆண்டு ஆனந்த் மல்லிகாவத் 'சன்சேரா' என்ற ஆட்டோமொபைல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு துறையின் திட்ட தலைவராக இருந்து வந்தார். தான் பணியாற்றும் நிறுவனத்தில், ஏரியின் நிலையைச் சொல்லி வருந்தினார். அவரின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட அந்த நிறுவனம் ஏரியைப் புதுபிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த ஏரியை புதுப்பிக்க, எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்று ஆனந்திற்குத் தெரியவில்லை. தகவல் அறிவும் சட்டம் மூலம், ஏரிகளை புதுப்பிக்க  எவ்வளவு செலவாகும் என அரசு  நிறுவனங்களிடம் ஆனந்த் கேட்டறிந்தார்.

சுமார் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்ற அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில்,  அவருக்கு அதிர்ச்சி அளித்தது. ஏரிகளைப்  புதுப்பிக்க என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்.  தான் படித்த தொழில்நுட்பக் கல்வி அதற்கு உறுதுணையாக இருந்தது. 

சமூக வலைத்தளம் மூலமாக இளைஞர்களின் உதவியை நாடினார். ஏரியை புதுப்பித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து அந்தக் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனால் கிராமத்தில் வசிக்கும் 400-க்கும் மேலான குடும்பங்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். மேலும் அவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைத்து, சுற்றியுள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர். பெங்களூரில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்து ஏரியில் இறங்கி வேலை செய்தனர். மரங்களை நட்டனர். மண் தூர்வாரப்பட்டது.  பல இளைஞர்கள் கரம் கோர்த்து கடின முயற்சி செய்ய  45 நாட்களில் ஏரி முழுமையாகத் தயாராகிவிட்டது.

'காஞ்சனஹள்ளி ஏரியை தூர்வாரிய பின் அதிலுள்ள 186 ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது.  தற்போது வெயில் காலம் துவங்கிவிட்ட போதிலும் சுமார் எட்டு அடி ஆழத்துக்கு இந்த ஏரியில் நீர் உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்''  என்று கூறுகிறார் விவசாயி எல்லப்பா . 

'எங்கள் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. முன்பு இந்த ஏரி வறண்டு இருக்கும். தற்போது நீர் மட்டம் உயர்ந்துள்ளது மட்டுமல்ல. பறவைகள் அதிகமாகி, செடிகள் வளர்ந்து பசுமையாக உள்ளது. இதனால் வரும் காலங்களில் மழை அதிகரிக்கும் என நினைக்கிறோம்'  என்று கூறுகிறார் கிராமத்துப் பெண் சௌரிபா.

'வெயில் காலத்தில் கால்நடைகள் இங்கு வந்து தாகம் தணித்துச் செல்கின்றன. சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் ஏரி கரையை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்'' என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ராசையா.

இது குறித்து ஆனந்திடம் கேட்ட போது சொன்னார்: 
'கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் பூமிக்காக வாழவுள்ளேன். இன்றைய இளைஞர்களிடம் அபார சக்தி உள்ளது. அதனைச் சுயநலத்தோடு பயன்படுத்தாமல் பொது நலத்துடன் பயன்படுத்தினால் பலரும் நன்மை அடைவார்கள். ஏரிகளைப் புதுபிக்கப்  பல நிறுவனங்கள் எங்களுக்கு  உதவ முன் வந்துள்ளன''  என்கிறார்  ஆனந்த்.

-வனராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com