லேடீஸ் ஸ்பெஷல் - பக். 256; ரூ.180.
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் சிறுகதை சிறப்பு இதழோ என எண்ணும் அளவிற்கு 24 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் முத்தானவை. குறிப்பாக டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், கிரிஜா ராகவன், காந்தலட்சுமி சந்திரமௌலி, பத்மினி பட்டாபிராமன், அழகிய சிங்கர், சுப்ர பாலன், திருப்பூர் கிருஷ்ணன், சாந்தா தத், லஷ்மி சுப்ரமணியம் எழுதிய கதைகள் நிகழ்கால சமூகத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். தெலுங்கு எழுத்தாளர் "ஓல்காவின் மூக்குத்தி' என்ற சிறுகதையை கௌரி கிருபானந்தம் அவர்களின் மொழியாக்கத்தில் தமிழில் வெளியிட்டதும் கூடுதல் சிறப்பு.
இந்த இதழ் நீர் மேலாண்மையை விளக்கும் கட்டுரைகள் நிறைந்ததாகவும் மலர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வசுமதி எழுதிய "நீரின் வடிவங்கள்', காந்தமணி நாராயணன் எழுதிய "நீரின் ஆதாரம்' மற்றும் சி.வி.கீதா, சி.ஆர்.மஞ்சுளா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் நுண்ணிய தகவல்களை உள்ளடக்கி பயனுள்ளதாக இருக்கின்றன. குரு மனோகரவேல் எழுதியுள்ள "அகத்தியர் தந்த நதிகளும் நூல்களும்', நித்தியாவின் "முக்தி அளிக்கும் நீர்த்தலம்', ஆலப்புழை உமா ஹரிஹரன் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளும் பிரமிப்பை ஏற்படுத்தி பல புதிய தகவல்களுடன் அறிவுக்கு விருந்தளிக்கின்றன.