சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட இதுதான் காரணம்! - ஆய்வில் தகவல்
பெரும்பாலான சாலை விபத்துகள் பள்ளி நேரங்களில்தான் நிகழ்வதாகக் கூறும் ஆய்வாளர்கள், பள்ளி செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டி பகுதியைச் சேர்ந்த இளம் வயதினர் பங்கேற்றனர். மேலும், சாலை விபத்துக்கும், பள்ளி நேரத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவும், இரண்டு மணி நேரம் பின்னதாகவும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 16 முதல் 18 வயதுடைய இளம் வயதினர் சாலை விபத்தில் அதிகம் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளிகள் காலை 7-8 மணியளவில் தொடங்கியதும் இதற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பள்ளிகள் சற்று தாமதமாக தொடங்கினால் விபத்துகளின் விகிதம் கணிசமாக குறைந்திருந்ததையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
பள்ளிகள் சற்று தாமதமாகத் தொடங்குவது பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது, காலையில் 7 முதல் 8 மணிக்குள் பள்ளிகள் தொடங்கும்பட்சத்தில், மாணவர்கள் வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் வாகனங்களில் வேகமாக செல்கின்றனர். அதிலும், சிலர் பாதுகாப்புக்கான சீட் பெல்ட் போன்றவைகளை அணிவதில்லை. இதுபோன்ற காரணங்களால் அதிக விபத்து ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி தொடக்க நேரங்களை மாற்றுவதனால் மாணவர்கள் அதிக நேரம் தூங்குகின்றனர். வழக்கத்தை காட்டிலும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றனர். மேலும், இதுபோன்ற அவசர விபத்துகளும் தவிர்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.